“புனித சடங்குகள் இல்லாத இந்து பதிவு திருமணங்கள் சட்டப்படி செல்லாது” - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
5வது திருமணம்

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் முறையான மதச் சடங்குகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் இன்றி வெறும் பதிவுச் சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது எனப் புகழ்பெற்ற குஜராத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் வசித்து வரும் கவுஷல் சோனார் என்ற நபர், அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராகக் குஜராத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்தப் பெண்ணுடன் தனக்கு இந்து முறைப்படியான எவ்வித திருமணச் சடங்குகளும் நடக்கவில்லை என்றும், இருவரும் கணவன்-மனைவியாக வாழவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தன்னிடம் ஏமாற்றிப் பெறப்பட்ட கையெழுத்தை வைத்து அந்தப் பெண் போலியாகத் திருமணப் பதிவுச் சான்றிதழைப் பெற்றுள்ளார் என்றும், எனவே அந்தத் திருமணத்தை முழுமையாகச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

குடும்பநல நீதிமன்றம், பெண்ணிடம் அதிகாரப்பூர்வ திருமணப் பதிவுச் சான்றிதழ் இருந்த ஒரே காரணத்திற்காக, அந்தத் திருமணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கவுஷல் சோனார் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த உயர் நீதிமன்ற விசாரணையின் போது, தங்களுக்குள் எந்தவொரு பாரம்பரிய இந்து திருமணச் சடங்குகளும் நடக்கவில்லை என்பதையும், தாங்கள் கணவன்-மனைவியாக வாழவில்லை என்பதையும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதிகள் இலேஷ் வோரா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய தற்காலிக அமர்வு, குடும்பநல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை முற்றிலும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்து திருமணங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளனர்.

திருமணம் கல்யாணம்

"இந்து திருமணச் சட்டத்தின்படி, மணமகனும் மணமகளும் புனித நெருப்பின் முன்னால் இணைந்து ஏழு அடிகள் எடுத்து வைக்கும் 'சப்தபதி' போன்ற இன்றியமையாத சடங்குகள் முறைப்படி செய்யப்பட வேண்டும். திருமணச் சடங்குகள் என்பவை ஒரு தனிநபரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி மாற்றியமைப்பதாக ஆன்மிக ரீதியாக நம்பப்படுகிறது. எனவே, அதற்குரிய முக்கியத்துவம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்."

மேலும் தங்களது தீர்ப்பில் கருத்துக்களைப் பதிவு செய்த நீதிபதிகள், "திருமணம் என்பது வெறும் 'பாடல், நடனம்' அல்லது 'உணவு விருந்து' கொண்டாடும் ஒரு சாதாரண நிகழ்வோ அல்லது இரு தரப்புக்கு இடையிலான வணிக ரீதியான பரிவர்த்தனையோ அல்ல. எனவே, சடங்குகள் ஏதுமின்றி வெறும் பதிவை மட்டும் வைத்துக் கொண்டு செய்யப்படும் இந்து திருமணங்கள் சட்டப்படி ஏற்புடையது அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறி, அந்தப் போலியான திருமணப் பதிவைச் செல்லாது என அறிவித்தனர்.

இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் சட்டப்பூர்வ அவசியத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.