தேனிலவில் விபரீதம்... தங்கும் விடுதி அறையில் புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!
புதுடெல்லியைச் சேர்ந்த 28 வயது ஸ்ரீசரண் குருகிராமைச் சேர்ந்த 27 வயது ராதா காயத்ரி என்ற பெண்ணைச் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். குருகிராமில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராதா காயத்ரி, தனது கணவருடன் தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 13-ம் தேதி டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்குப் புறப்பட்ட இந்த புதுமண தம்பதி, ரிஷிகேஷ் பகுதியைச் சுற்றிப் பார்த்த பின்னர் 14-ம் தேதி இரவு முசோரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
அன்று இரவு விடுதி அறையில் தங்கியிருந்த தம்பதியினர் விடிய விடிய மது அருந்திவிட்டு, அதிகாலை 3.30 மணியளவில் உறங்கச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் காலையில் ஸ்ரீசரண் கண்விழித்துப் பார்த்த போது, ராதா காயத்ரி மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் உடனடியாக விடுதி நிர்வாகத்திற்கும் உள்ளூர் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புதுப்பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த தடயவியல் குழுவினர் தங்கும் விடுதி அறையில் இருந்து சில முக்கிய ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மென்பொருள் பொறியாளரின் இந்த திடீர் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலிசார் காத்துக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் கணவர் ஸ்ரீசரணைத் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
