மருத்துவமனை தீ விபத்தில் 20 உயிர்களைக் காத்த 95 வயது பாட்டி... நெகிழ்ச்சி வீடியோ!

 
fire fire

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் அவசரச் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு 3:30 மணி அளவில் இந்த பிரிவில் எதிர்பாராத விதமாகப் புகை மூட்டத்துடன் கூடிய தீ விபத்து ஏற்பட்டது. அங்கு மூச்சுத் திணறல் காரணமாகக் குழாய் வழியே ஆக்சிஜன் பெற்று வந்த சப்ரா மேக் பகுதியைச் சேர்ந்த 95 வயது ராதா தேவி என்ற பாட்டி இந்த ஆபத்தை உணர்ந்தார்.

அறை முழுவதும் கரும் புகை சூழ்ந்ததைக் கண்ட அந்தப் பாட்டி சற்றும் பயப்படாமல் தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் குழாயைத் தைரியமாகக் கழற்றி எறிந்தார். பின்னர் தட்டுத்தடுமாறி அந்த நச்சுப் புகையைக் கடந்து மாடிப் படிக்கட்டுகள் வழியே கீழே ஓடிவந்து அங்கிருந்த செவிலியர்களிடம் ஆபத்து குறித்துச் சத்தம் போட்டுக் கூச்சலிட்டார்.

பாட்டி கொடுத்த தகவலால் உஷாரான நிர்வாகத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதிகாரி ராம்நிவாஸ் பாண்டே தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு 20 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி இறந்த போதிலும், பாட்டியின் செயலால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.