கடன் சுமையால் விபரீதம்... மகன்களுக்கு மெசேஜ் அனுப்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தற்கொலை... !
சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 52 வயது சுப்பிரமணியன் என்பவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் அவரது மனைவி 42 வயது நாகலட்சுமி பட்டுப்புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர்களது இரண்டு மகன்களும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்து வருவதால் வீட்டில் பணத் தேவை அதிகரித்துக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவரின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் கடுமையான கடன் சுமை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சுப்பிரமணியன் வெளியில் சென்று அரிவாள் வாங்கி வந்து தனது மனைவி நாகலட்சுமியை கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியில் இருந்த தனது மகனுக்கு நாங்கள் இனி இருக்க மாட்டோம் என்று செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய சுப்பிரமணியன் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்த மகன் தனது தாய் மற்றும் தந்தை இருவரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை மற்றும் கடன் அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
