ரஜினி உத்தரவிட்டால் விஜய்க்கு எதிரா வாக்களிப்போம்... விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை - ரஜினி ரசிகர்கள் ஆவேசம்!

 
ரஜினி மதுரை ரசிகர்கள் ரஜினி மதுரை ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் 'சென்னை அசோக்' என்பவரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதுரையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

விஜய் தற்போது மூளை வளர்ச்சி இல்லாத, முதிர்ச்சியற்ற விளையாட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார். அவருக்கு முறையான அரசியல் கட்டமைப்பே இல்லை. உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் விஜய், தற்குறிகளையும், சில்வண்டுகளையும் உடன் வைத்துக்கொண்டு அரசியலைச் சீரழிக்கிறார். ரஜினி ரசிகர்களைச் சீண்ட நினைத்தால், விஜய்க்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

ரஜினியுடன் 45 ஆண்டுகள் இருந்ததாகச் சென்னை அசோக் கூறுவது முற்றிலும் பொய். அவர் ஒரு சாதாரண பகுதி செயலாளர் மட்டுமே. அவருக்கும் ரஜினி ரசிகர் மன்றத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆதவ் அர்ஜுனா பல இடங்களில் குழப்பம் விளைவித்து பல குடும்பங்களை வீணடித்துள்ளார். அவர் சண்டை மூட்டி குளிர் காய நினைக்கிறார். பிரதமர் மற்றும் முதல்வர் குறித்தும் அவர் தவறாகப் பேசியுள்ளார். தியாகி போல வேடமிடும் அசோக், முடிந்தால் ரஜினி ரசிகர்களுடன் 'ஒன் டூ ஒன்' விவாதத்திற்கு வரத்தயாரா? எனச் சவால் விடுத்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளார். ஆனால், ரஜினியைப் பற்றித் தவறாகப் பேசுவது ரசிகர்களின் நெஞ்சில் ஈட்டியால் குத்துவது போல் உள்ளது. கோடி கணக்கான ரசிகர்களைத் தாண்டி, தமிழ் மக்கள் நேசிக்கும் ஒரு தலைவரை "சமமாகப் பழகினேன்" என்று தகுதியற்றவர்கள் கூறுவது கண்டனத்திற்குரியது.

"எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் ஒரு வார்த்தை உத்தரவிட்டால், வரும் தேர்தலில் விஜய்க்கு எதிராக நாங்கள் ஒன்றுதிரண்டு வாக்களிப்போம்" என்று மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.