ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் - அமைச்சர் என். ஆனந்த் உறுதி!

 
தவெக புஸ்ஸி ஆனந்த் தவெக புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின், நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சி மற்றும் அரசு ரீதியான நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது, புதிய அரசின் கொள்கைகள் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் குறித்து அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், தவெக அரசின் முதன்மை நோக்கம் தூய்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதுதான் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தவெக புஸ்ஸி ஆனந்த்

"எங்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது அமைச்சரவையில் உள்ளவர்களுக்கோ லஞ்சம் வாங்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழி அல்ல என்பதைத் தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு உரிய நன்மைகளைச் செய்யும் ஒரு மக்கள் சேவையாக மட்டுமே தவெக இந்த ஆட்சியைக் கருதுகிறது என்றார். நிர்வாகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கட்சி மற்றும் சட்டம் ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதை அமைச்சர் தனது உரையில் எச்சரித்தார்.

ஆனந்த்

"அரசு நிர்வாகத்திலோ அல்லது மக்கள் பணிகளிலோ யாராவது ஊழலில் ஈடுபட்டால், அடுத்த விநாடியே அவர்கள் மீதும், அவர்களது பதவியின் மீதும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவார். பதவி பறிப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் உடனடியாகப் பாயும்" எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

புதிய ஆட்சி அமைந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அமைச்சரவையின் முக்கியப் பொறுப்பில் உள்ள என். ஆனந்த்தின் இந்த வெளிப்படையான பேச்சு, அரசு இயந்திரத்தில் லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய வழிகாட்டுதலாகப் பார்க்கப்படுகிறது.