ரூ.500 கொடுத்தால் 'ஜெயில்' சாப்பாடு - ஒரு நாள் கைதியாக வாழ அரிய வாய்ப்பு... அசத்தும் சிறை அருங்காட்சியகம்!
சிறைச் சாலைகளுக்குள் என்ன நடக்கும்? கைதிகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை ஒரு நாள் கைதியாகவே மாறிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஹைதராபாத் சிறைத்துறை புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சஞ்சல்குடா சிறை வளாகத்தில் புதிய சிறை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘பீல் தி ஜெயில்’ என்ற திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த அனுபவத்தைப் பெற விரும்புவோர் ஒரு நாளைக்கு ₹500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பொதுமக்களுக்குக் கைதிகளுக்கான சீருடை வழங்கப்படும். அவர்கள் ஒரு நாள் முழுவதும் சிறை அறையிலேயே தங்க வைக்கப்படுவார்கள்.

சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவு முறையே இவர்களுக்கும் வழங்கப்படும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என அனைத்தும் சிறை மெனுபடியே இருக்கும். இந்த அருங்காட்சியகம் வெறும் தங்குமிடமாக மட்டுமல்லாமல், சிறைத்துறையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது:
நிஜாம் காலம் முதல் தற்போது வரை சிறைத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், பழைய கைவிலங்குகள், தண்டனை முறைகள் மற்றும் ஆவணங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கைதிகளின் மறுவாழ்வுப் பணிகள் மற்றும் அவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் குறித்தும் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.

சிறை வாழ்க்கையின் கடினத்தன்மையைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களில் இருந்து இளைஞர்களைத் திசைதிருப்பவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெலங்கானாவின் சங்காரெட்டி பழைய சிறையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
