India Post: ரூ.75,000 வரை பரிசுத்தொகை... இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய சின்னம் வடிவமைக்கும் போட்டி!

 
அஞ்சல்

170 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை தனது பாரம்பரியத்தையும் நவீன டிஜிட்டல் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய சின்னத்தை வடிவமைப்பதற்கான தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளது.


மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை, பொதுமக்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டியை MyGov இணையதளம் மூலம் நடத்துகிறது.

போட்டியில் பங்கேற்பாளர்கள் அசல் சின்னத்தின் வடிவமைப்பு, அதற்கான பெயர் மற்றும் அதன் கருப்பொருளை விளக்கும் குறிப்பு ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள பொதுமக்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை MyGov தளத்தின் மூலம் தங்களின் கலைப்படைப்புகளை அனுப்பலாம்.

அஞ்சலகம்

சிறந்த முறையிலான வடிவமைப்புகளைத் தேர்வு செய்து மத்திய அரசு ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளது. முதல் பரிசு: ரூ. 75,000, இரண்டாம் பரிசு: ரூ. 50,000, மூன்றாம் பரிசு: ரூ. 25,000

தேர்ந்தெடுக்கப்படும் புதிய சின்னமானது அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ விளம்பரங்கள், அஞ்சல் தலைகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் முதன்மை அடையாளமாகப் பயன்படுத்தப்படும்.