நாட்டின் பாதுகாப்பிற்குப் புதிய பலம்... முப்படைகளின் தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!
இந்தியாவின் முப்படைகளுக்கும் புதிய தலைமை தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வரும் மே 30-ஆம் தேதியுடன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். அவருக்குப் பின் அந்த உயரிய பொறுப்பை ஏற்க உள்ள ராஜா சுப்ரமணி, ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் கூடுதல் பொறுப்புகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராணுவத்தின் துணைத் தளபதியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராஜா சுப்ரமணி, தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். மேலும், ராணுவத்தின் மத்திய கட்டளையின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றி முப்படை ஒருங்கிணைப்பில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். இவரது நீண்ட கால அனுபவமும், ராணுவ உத்திகளை வகுப்பதில் இவருக்குள்ள தனித்துவமும் இந்தப் பதவிக்கு அவரைத் தேர்வு செய்ய முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
ராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றியுள்ள லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நவீன போர் முறைகளில் வல்லவர் எனக் கருதப்படுகிறார். அனில் சவுகானுக்குப் பிறகு இவர் பொறுப்பேற்பது இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் அதிகரித்து வரும் வேளையில், முப்படைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் மிக முக்கியமான பொறுப்பை இவர் வரும் மே இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளார்.
