தலைநகரில் பரபரப்பு.... சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 ஆப்பிரிக்க நாட்டவர்கள் பிடிப்பு!
டெல்லி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி விசா காலம் கடந்து தங்கியிருந்த வெளிநாட்டவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகப் பாண்டவ் நகர் மற்றும் பாட்பர்கஞ்ச் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த 7 வெளிநாட்டவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்ட ரகசிய விசாரணையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனைகளில் சிக்கியவர்களில் 5 நைஜீரியா மற்றும் 2 கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஓசிதா கெமென், கொடா சிந்தியா, ஜேம்ஸ், லிவி ஒடுகானா மற்றும் கிலேச்சி கார்னிலியஸ், ஒகேசுகு சோலோமன், சுக்வுடி அலிசன் உள்ளிட்ட நபர்களின் பின்னணிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். பிடிபட்டவர்களில் சிலரது பெயர்கள் ஏற்கனவே விசா காலம் முடிந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் டெல்லியில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அங்குள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சேவை சதன் பகுதிக்கு இவர்களின் நடமாட்டத்தை வரம்புக்குட்படுத்தி சட்டப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பிய அனுப்பும் நடவடிக்கைகள் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தின் வழிகாட்டுதலோடு முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
