விபத்தில் சிக்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டர் .. பரிதாபமாக பலியான அதிகாரி..!!
![கொச்சி கடற்படை ஹெலிகாப்டர் விபத்து](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/1aa07e3182eaf7a27fd52de9c0699770.jpg)
கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவின் ஓடுபாதையில் சேடக் ஹெலிகாப்டர் இன்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானதாக கடற்படை வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பயிற்சி விமானத்தில் இருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர், லிப்ட்-ஆஃப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடுபாதையில் இருந்த கடற்படை அதிகாரி ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடுகளில் அடிபட்டு இறந்தார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இது தொடர்பான இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கொச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுபாதையில் இந்த விபத்து நடந்ததாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது, இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பைலட் உட்பட இருவர் காயம் அடைந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கடற்படை தலைமையகத்தில் உள்ள சஞ்சீவனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.