இந்திய ரயில்வேயின் வரலாற்றுச் சாதனை - 1.3 கி.மீ நீளமுள்ள இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரயில் இயக்கம்!
இந்திய ரயில்வே துறை சுமார் 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட அதிநீள இரட்டை அடுக்கு (Double Decker) கண்டெய்னர் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிப் புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த நீண்ட இரட்டை அடுக்கு ரயில், குஜராத்தில் உள்ள சரக்கு ரயில் நிலையத்தை வெற்றிகரமாகச் சென்றுடைந்தது. இரு ரயில்களை ஒன்றாக இணைத்தது போன்ற சுமார் 1.3 கிலோமீட்டர் நீளத்தில், இரண்டு அடுக்குகளாகக் கண்டெய்னர்களைச் சுமந்து கொண்டு இந்த ரயில் பயணித்துள்ளது.
ஒரே நேரத்தில் பெருமளவிலான சரக்குகளைக் கையாள முடிவதால், தொழில்துறைக்கான மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து நேரம் கணிசமாகக் குறையும்.
தனித்தனியாகப் பல ரயில்களை இயக்குவதற்குப் பதிலாக, இதுபோன்ற அதிநீள இரட்டை அடுக்கு ரயில்களை இயக்குவதன் மூலம் ரயில்வேயின் இயக்கத் திறனும் எரிபொருள் சேமிப்பும் அதிகரிக்கும்.
