வைரலாகும் இன்ஸ்டா... சொகுசான வங்கிப்பணியை விட்டு ’ஆடி’ காரில் வீடு வீடாக பால் ஊற்றும் இளைஞர்!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் அமித் பதானா. இவர் , வங்கி வேலையை விட்டுவிட்டு, தனது ஆர்வமான வாகனங்களுடன் குடும்பத் தொழிலான பால் விநியோகம் செய்து வருகிறார். முதலில் பைக்கில் பால் விநியோகம் செய்த அவர், தற்போது ஆடி காரில் பால் விநியோகம் செய்கிறார்.
ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர், தனது வங்கி வேலையை விட்டுவிட்டு, சொகுசு காரில் பால் விநியோகம் செய்வதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஃபரிதாபாத்தில் உள்ள மொஹபதாபாத் கிராமத்தைச் சேர்ந்த அமித் பதானா, உயர் ரக பைக்குகள் மற்றும் கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இவர் படித்து பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு வங்கிப் பணியில் சேர்ந்தார். ஆனால், கார்ப்பரேட் உலகம் தனது ஆர்வத்தைத் தொடரும் திறனைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்தார் அமித் பதானா. தனது வங்கி வேலை வாகனங்கள் மீதான தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்தியதாக அவர் உணர்ந்துள்ளார்.
அவரது குடும்பம் ஏற்கனவே பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பதானா தனது வாகன மோகத்தையும் குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டார். அவ்வளவு தான். "எனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றவும், அதைக் குடும்பத் தொழிலுடன் சேர்த்து நிறைவேற்றவும் முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வங்கி வேலையை விட்டுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கு பால் விநியோகிக்கத் தொடங்கினார்.
பதானா முதலில் ஒரு ஹார்லி-டேவிட்சன் பைக்கில் வீடு வீடாகச் சென்று பால் ஊற்றி வந்தார். தொழில் வேகமாக வளரத் தொடங்கியது. அவரது பால் விநியோகம் விரிவடைந்தது. அதன்பிறகு போக்குவரத்துக்காக காரை விலைக்கு வாங்கி பால் ஊற்றினார். அந்த வகையில் தற்போது அமித் பதானா தனது வாடிக்கையாளர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரில் பால் விநியோகிக்கிறார்.
இது குறித்து அமித் பதானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் தனது பைக்கில் பால் விநியோகிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் அதில் "கார் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு, எனது ஆர்வத்தை என்னால் விட்டுவிட முடியாது. இப்போது நான் எனது ஆர்வத்தை குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டேன், இதன் மூலமாக நான் சம்பாதிக்கிறேன், எனது பொழுதுபோக்கும் நிறைவேறி வருகிறது," எனக் கூறுகிறார். தொழிலைத் தொடர உதவியதில் தனது குடும்பத்தினரின் ஆதரவையும் அமித் பதானா பாராட்டுகிறார்.
பல வருடங்களாக பதானாவிடமிருந்து பால் வாங்கிவரும் வாடிக்கையாளர்கள் அவரது இந்த முன்னேற்றத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 13 வருடங்களாக அமித் பதானாவிடம் பால் வாங்கும் ஒரு வாடிக்கையாளர், "ஒரே வித்தியாசம் என்னவென்றால், முன்பு அவர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பைக்கில் பால் டெலிவரி செய்தார், இன்று அவர் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரில் வருகிறார்" எனக் கூறியுள்ளார்.