விபரீத தொழில்நுட்பம்... இன்ஸ்டாகிராம் படங்களை அனுமதியின்றி நகலெடுக்கும் மெட்டாவின் புதிய ஏஐ வசதி...தப்பிப்பது எப்படி?
உலகப் புகழ்பெற்ற மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் 'மியூஸ் இமேஜ்' (Muse Image) என்ற புதிய செயற்கை நுண்ணறிவுப் புகைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பமானது பயனர்களின் எளிய கட்டளைகளுக்கு ஏற்பப் புதிய படங்களை உருவாக்குவதோடு, எழுத்துக்களைச் சேர்த்தல் மற்றும் கியூஆர் குறியீடுகளை உருவாக்கும் வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், யார் வேண்டுமானாலும் பொதுக்கணக்கில் (Public Account) உள்ள ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, அவரின் முக அமைப்பை அப்படியே புதிய ஏஐ படமாக மாற்ற முடியும்.
பயனர்களின் எவ்வித முன் அனுமதியும் இன்றியே அவர்களின் புகைப்படங்களை மெட்டா நிறுவனம் இத்தகைய ஏஐ உருவாக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்த விசித்திரமான அம்சம் பொதுக்கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் தானாகவே செயலில் இருக்கும்படி (By Default) மெட்டா வடிவமைத்துள்ளது. தங்களின் புகைப்படங்கள் யாரால், எப்போது ஏஐ படமாக மாற்றப்படுகிறது என்ற எந்தவொரு அறிவிப்பும் பயனர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது என்பதால் இது தனிமனிதத் தனியுரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இத்தகைய அச்சுறுத்தலில் இருந்து தங்களின் இன்ஸ்டாகிராம் படங்களைப் பாதுகாக்கப் பயனர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். முதலில் இன்ஸ்டாகிராம் செயலியின் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் சென்று, அதில் உள்ள 'ஷேரிங் அண்ட் ரீயூஸ்' (Sharing and reuse) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்குச் சென்று 'அலோ பீப்பிள் டு யூஸ் யுவர் கன்டென்ட்' (Allow people to use your content) என்ற பகுதியில் உள்ள போஸ்ட் மற்றும் ரீல்ஸ் ஆகிய 2 ஆப்ஷன்களையும் உடனடியாக அணைத்து (Turn Off) வைக்க வேண்டும்.
