ஐபிஎல் ரசிகர்களுக்கு ஜாக்பாட்... சென்னை மெட்ரோவில் இனி இலவச பயணம்!

 
ஐபிஎல் ஐபிஎல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இணைந்து அதிரடி சலுகையை அறிவித்துள்ளன. கிரிக்கெட் போட்டிக்கான மின்னணு அல்லது காகித பயணச்சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் எந்த கட்டணமும் இன்றி பயணம் செய்யலாம். டிக்கெட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து ரசிகர்கள் இரண்டு முறை மெட்ரோவில் ஏறி இறங்க இந்த சிறப்பு வசதி வழிவகை செய்கிறது.

ஐபிஎல்

இந்த இலவச பயண வசதியானது சென்னை மெட்ரோவின் எந்தவொரு நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்குச் செல்லவும் அங்கிருந்து மீண்டும் இருப்பிடத்திற்குத் திரும்பவும் பொருந்தும். போட்டி முடிந்து ரசிகர்கள் நள்ளிரவில் வீடு திரும்ப வசதியாக அரசினர் தோட்டம் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையத்திற்குச் செல்லும் கடைசி ரெயில்கள் நள்ளிரவு 1 மணிக்கு இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் பயணம் செய்பவர்கள் சென்னை சென்டிரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே தங்களது வழித்தடத்தை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல்

ரசிகர்கள் நெரிசலைத் தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிலையத்திற்குள் வர வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்களின் வசதிக்காக நள்ளிரவு வரை கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுப் போக்குவரத்து வசதியை ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மைதானம் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.