ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; அமெரிக்காவுடனான மோதல் உச்சக்கட்டம் - உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் ஆபத்து!
ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை கடல்வழிப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடுவதாகத் தெஹ்ரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் மோதலை நோக்கி மேலும் ஒரு படி நெருங்கியுள்ளன. இந்த விபரீத நடவடிக்கை இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
சமீபத்திய பதற்றத்தின் தொடர்ச்சியாக, ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பகிரங்கமாக அச்சுறுத்தியதோடு, அதே நேரத்தில் தெஹ்ரானைப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு வலியுறுத்திய சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் அரங்கேறின.
அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்தும், முடங்கியுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகைக்குள் வளர்ந்து வரும் அதிருப்தியைத் தொடர்ந்தும், கூடுதல் தாக்குதல்களை நடத்துவதற்கான இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தனது பதிலடித் தாக்குதலைக் கொடுத்துள்ளது.

"இன்றும் அவர்களை மீண்டும் கடுமையாகத் தாக்குவோம்" என்று செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக இருந்தோம், ஆனால் அவர்கள் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் உட்பட அனைத்து கடல்வழிப் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்காகக் கருதப்படும் என்று நாட்டின் உயர்மட்ட இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
"அமெரிக்க எதிரியின் குற்றவியல் ஆக்கிரமிப்புகள்" மற்றும் தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நடந்த புதிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள அந்தத் தலைமையகம், இந்தத் தடையை மீற முயன்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நீர்வழிப்பாதை வெற்றிகரமாக மூடப்பட்டுவிட்டது என்ற ஈரானின் கூற்றை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்துள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு உண்மைச் சரிபார்ப்பில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் வணிகக் கப்பல்கள் இப்போதும் ஹோர்முஸ் நீர்வழிப்பாதைக்குள் தொடர்ந்து சென்று வருவதாகக் கூறியுள்ளது. இந்த முரண்பாடான கூற்றுகள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன. ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையில் அமைந்துள்ள இந்தக் குறுகிய பாதை, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கிறது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஈரான் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இதுவே முக்கிய ஏற்றுமதிப் பாதையாக விளங்குவதால், இதில் ஏற்படும் தடை உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபரீத நடவடிக்கையால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது தினமும் 20 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய் விநியோகம் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. இது உலகளாவிய எண்ணெய் நுகர்வில் ஏறக்குறைய 20 சதவீதத்தைக் குறிக்கிறது. அதேபோல் உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே செல்வதால், ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் மின்சார உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதன் நேரடி விளைவாகச் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 2.30 டாலர் (2.47%) உயர்ந்து 95.40 டாலராகவும், அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 2.60 டாலர் (2.89%) உயர்ந்து 92.63 டாலராகவும் அதிகரித்துள்ளது. உயரும் எண்ணெய் விலைகள் காரணமாகப் போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து உலகளவில் பணவீக்கம் மீண்டும் வரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான உரம் மற்றும் யூரியா ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடையால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்களின் விலையும் தானாகவே உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் ஏற்கனவே அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு எச்சரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மதிப்பீடுகளின்படி, நீடித்த உயர் எரிசக்தி விலைகள் வணிகச் செலவுகளை அதிகரித்து வேலைவாய்ப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். இந்த இடையூறு வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடித்தால், அதன் ஒட்டுமொத்தப் பாதிப்புகளையும் பெட்ரோல் நிலையங்கள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் நிதிச் சந்தைகள் முழுவதும் உலக மக்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் உலகப் பொருளாதாரம் பெரும் பதற்றத்துடன் இதைக் கவனித்து வருகிறது.
