2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஈரான் விலகல்!" - அமெரிக்காவில் விளையாட மறுப்பு!

 
உலகக்கோப்பை கால்பந்து உலகக்கோப்பை கால்பந்து

சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஈரான் 2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தங்களது தலைவரைக் கொன்ற மண்ணில் விளையாட மாட்டோம் என்று புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள 2026 பிபா (FIFA) உலகக் கோப்பை தொடரில் இருந்து ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அரசியல் காரணங்களால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது நாட்டின் தலைவரைப் படுகொலை செய்த அமெரிக்க மண்ணில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க முடியாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானிய விளையாட்டுத் துறை அமைச்சர் அகமது டோன்யாமலி அரசு தொலைக்காட்சியில் பேசுகையில், "எங்கள் நாட்டு வீரர்களுக்கு அமெரிக்காவில் பாதுகாப்பு இல்லை. ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒரு கால்பந்து திருவிழாவில் எங்களால் பங்கேற்க முடியாது" என்று உணர்ச்சிகரமாகத் தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் ஈரான் அணி பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் 'குழு ஜி'-யில் இடம் பெற்றிருந்தது. ஈரானின் ஆட்டங்கள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் ஆகிய அமெரிக்க நகரங்களில் நடக்கவிருந்தன.

ஈரான் இடைக்கால உச்ச தலைவர் அயத்துல்லா அலிரேசா அரபி

ஈரானின் இந்தத் திடீர் விலகல் உலகக் கோப்பை அட்டவணையைப் பாதித்துள்ளது. ஈரானுக்குப் பதிலாக ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஈராக் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய அணிகளில் ஒன்றைச் சேர்க்க பிபா ஆலோசித்து வருகிறது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய வீரர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தும், ஈரான் அதனை ஏற்க மறுத்துவிட்டது.