"தகவல் தொடர்பு தவறால் இந்தியக் கப்பல்களைத் தாக்கி விட்டோம்” - ஈரான் விளக்கம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் முற்றுகைக்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் நேற்று அறிவித்தது. முன்னதாக, ஜலசந்தியைத் திறப்பதாக ஈரான் அறிவித்திருந்தபோது, சுமார் 14 இந்தியக் கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டன. ஆனால், திடீரென ஈரான் தனது முடிவை மாற்றிக் கொண்டதால் குழப்பம் ஏற்பட்டது.

ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்கும் 21 இந்தியக் கப்பல்களின் பட்டியலை ஏற்கனவே இந்திய அதிகாரிகள் ஈரானிடம் வழங்கியிருந்தனர். இருப்பினும், நேற்று அந்தப் பாதையைக் கடக்க முயன்ற 2 இந்தியக் கப்பல்கள் மீது ஈரானியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த கப்பல்கள் உடனடியாகத் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பின.

இந்தச் சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள ஈரான் தூதர் முகமது பதாலியை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், "இந்தியக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல் எந்த உள்நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலும் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட தகவல் தொடர்பு இடைவெளி காரணமாகவே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது."
