"ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கே துரோகமா?" - வெடித்தார் சபாநாயகர் தனபால்! எடப்பாடிக்கு எதிராகப் பகிரங்கப் புகார்!

 
தனபால் தனபால்

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் தனபால், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தனக்குச் சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பரபரப்புப் பேட்டியளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மீது அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது அதிருப்தியை வெளிப்படுத்திய தனபால், கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.  "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 18 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியபோது, அவர்களைத் தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தது நான் தான். அன்று நான் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் இன்று இந்த ஆட்சியே இருந்திருக்காது. ஆனால், அந்த நன்றியை மறந்து இன்று என்னை ஓரங்கட்டியுள்ளனர்."

தனபால்

"விருப்ப மனு அளித்தும் கூட, என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவிநாசி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான எனக்கு மீண்டும் வாய்ப்பு தருவார்கள் என நம்பினேன். ஆனால் அங்கே பாஜக வேட்பாளரை நிறுத்த எடப்பாடி சம்மதித்துள்ளார்." எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிபணிந்து போவதாகத் தனபால் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்:

"ராசிபுரம் மற்றும் அவிநாசி ஆகிய இரண்டு தனித் தொகுதிகளையும் அதிமுகவிடமிருந்து பாஜக பிடுங்கியுள்ளது. பாஜக எதைச் சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுத்துச் செல்கிறார். அதிமுகவின் தனித்தன்மை அடகு வைக்கப்பட்டுள்ளது."

சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தவெக

"கட்சிக்குள் மூத்தவர்களுக்கு இப்போது எவ்வித மரியாதையும் இல்லை. உண்மையாக உழைத்தவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, டெல்லியின் சொல்படி கட்சி நடக்கிறது."

தனபாலின் இந்தப் பேட்டி அதிமுகவின் தலித் வாக்கு வங்கியில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு மூத்த தலைவர் இப்படிப் பகிரங்கமாகப் பேசியிருப்பது, தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.