இதல்லவா லக்.. ஒரே இரவில் கோடிஸ்வரன் ஆன லாட்டரி ஏஜெண்ட்.. விற்காத லாட்டரி சீட்டால் வந்த யோகம்..!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த என்.கே.கங்காதரன் என்பவர் லாட்டரி ஏஜென்ட் ஆக உள்ளார். கேரள மாநில அரசின் 50 50 லாட்டரியின் வெற்றி எண் அறிவிக்கப்பட்ட பின்பு தன்னிடம் விற்கப்படாமல் இருக்கும் லாட்டரியை செக் செய்ய துவங்கினார். சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிச் சீட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். கங்காதரன் ஒரு லாட்டரி ஏஜெண்ட் என்பதால் தன்னிடம் இருக்கும் லாட்டரி திருடப்படுமோ என்று பயந்து வெற்றிப்பெற்றதை யாருக்கும் தெரிவிக்காமல் அமைதியாக எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நேரடியாக வங்கியில் ஒப்படைத்தார். வெற்றிப்பெற்ற லாட்டரி சீட்டு மூலம் 1 கோடி ரூபாய் விழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் கங்காதரன் 33 ஆண்டுகளாக பஸ் கண்டக்டராக பணியாற்றியவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் லாட்டரி கடை திறந்தார். இவருடைய கடைக்கு பரிசு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவருடைய கடையில் லாட்டரி வாங்கியவர்களில் ஆறு பேருக்கு தலா ரூ.5,000 பரிசு வென்றுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பும் கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடியை கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். ஒரு லாட்டரி சீட்டின் ரூ.500 ஆகும். மொத்தம் 75.76 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அபு தாபி நாட்டின் பிரபலமான பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹாம் சுமார் 44 கோடி ரூபாய் அளவிலான பரிசை வென்றார் பெங்களூரைச் சேர்ந்த அருண் குமார் என்பவர். இதன் மூலம் ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆனார், இவருடைய வெற்றியை ஓட்டுமொத்த இந்தியாவும் பார்த்து வியந்தது. லாட்டரி மூலம் பெரும்பாலானோர் தங்களுடைய சேமிப்பை இழப்பது மட்டும் அல்லால் இதில் அதிகமாக முதலீடு செய்பவர்கள் நிதி நிலை மோசமாகிறது. லாட்டரியில் சிலர் மட்டுமே பெரும் தொகையை சம்பாதிக்கின்றனர். எனவை பணத்தை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.