அதிகாலையிலேயே அமலுக்கு வந்தது... கேரளத்தில் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப் பயணம்!
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளத்திலும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு முற்றிலும் கட்டணமில்லா இலவசப் பயணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி, புதிய அரசு அமைத்துள்ள நிலையில், தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 'பிரியதர்ஷினி' என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 7 வகையான சாதாரண மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் எவ்விதக் கட்டணமும் இன்றி இன்று அதிகாலை முதல் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையால், அம்மாநிலத்தில் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் சுயஉதவிக் குழுவினர் தங்களது மாதாந்திர போக்குவரத்துச் செலவுகள் பெருமளவு குறைந்து ஒட்டுமொத்தமாகப் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள் என்பதால், கேரள மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு வரவேற்புக் கிளம்பியுள்ளது.
