மாணவர்களுக்கு ஜாக்பாட்... தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ. 401 கோடி நிதி ஒதுக்கீடு. !
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை கொண்டுவரவும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். இத்திட்டத்தின் படி அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.இத்திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆதார் கார்டு அவசியம். இந்த தகவலை அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆதார் மையங்களில் மாணவர்கள் ஆதார் அட்டை பெறலாம். அருகில் ஆதார் மையங்கள் இல்லையெனில் கல்வி நிறுவனங்கள் அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாணவரின் ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7ம் தேதிக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான வழிகாட்டு விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை,
“ 1. வருமான உச்ச வரம்பு. இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
2. அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள்.
3. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளார். "அரசுப் பள்ளி" என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
4. உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.
5. தொலைதூர அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
6. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.
7. மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய முடியாது.
8. ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
9. பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி படித்து வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் 3 ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.
10. பருவத் தேர்வு / வருடத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். 11. பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது