அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகல் - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு!
அதிமுக உடனான கூட்டணி சட்டமன்றத் தேர்தலுடன் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, அதிமுக கூட்டணியில் இருந்து தங்கள் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தற்போது அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம்பெறவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, அடுத்தகட்டக் கூட்டணி மற்றும் அரசியல் முடிவுகள் குறித்துக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பூவை ஜெகன்மூர்த்தி, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புரட்சி பாரதம் கட்சி புதிய கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து இயங்குமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
