அரசு மருத்துவமனைகளில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் சிறை நடவடிக்கை; அனைத்து வீடியோக்களையும் நீக்க உத்தரவு - தமிழக அரசு எச்சரிக்கை!

 
நர்ஸ்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களுக்காக 'ரீல்ஸ்' மற்றும் குறுகிய வீடியோக்கள் எடுப்பதற்குத் தமிழக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது சைபர் குற்றப்பிரிவின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், அறுவைச் சிகிச்சைக்கூடங்கள் மற்றும் வார்டுகளில் சிலர் ரீல்ஸ் எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், நோயாளிகளின் சிகிச்சை பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகச் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வரும் பொதுமக்களின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடிப்பதும், பின்னணி இசையுடன் வீடியோக்களைப் பதிவிடுவதும் அவர்களது அடிப்படைத் தனியுரிமையை மீறும் சட்டப்படியான குற்றமாகும்.

ஸ்டான்லி மருத்துவமனை

இனிவரும் நாட்களில் அரசு மருத்துவமனை வளாகங்களுக்குள் எந்தவொரு பகுதியிலும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ன் கீழ் காவல்துறை மூலம் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிரக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளுக்குப் புறம்பாக அரசு மருத்துவமனைகளின் உள்ளே எடுக்கப்பட்டு, ஏற்கனவே சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றப்பட்ட அனைத்து ரீல்ஸ் மற்றும் சமையல்/வாழ்க்கைமுறை சார்ந்த வீடியோக்களையும் சம்பந்தப்பட்ட கணக்கு உரிமையாளர்கள் உடனடியாகத் தங்களது பக்கங்களிலிருந்து நீக்க வேண்டும் எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனை

அரசு மருத்துவமனைகளின் மாண்பைக் காக்கவும், நோயாளிகளுக்குத் தடையற்ற அமைதியான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் தலைமை மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.