எல்லையில் பரபரப்பு... காவிரி நீரால் கர்நாடகாவில் 'ஜனநாயகன்' திரைப்பட சுவரொட்டி கிழிப்பு!

 
karnataka

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அண்மையில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தக் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாகக் கர்நாடகாவின் பல பகுதிகளில் கன்னட அமைப்புகளும் விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயகன்

பெங்களூரு, மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவிரி நீரைத் தமிழகத்திற்கு வழங்கக் கூடாது எனக் கூறிப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மண்டியா பகுதியில் அமைந்துள்ள குருஸ்ரீ திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் திரையிடப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சுவரொட்டிகளை கன்னட அமைப்பினர் கிழித்துத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த நிகழ்வு அங்குள்ள சினிமா ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயகன்

தண்ணீர் திறப்பதற்கு எதிரானப் போராட்டங்கள் தொடர்ந்து பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அம்மாநிலக் காவல்துறை பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திரையரங்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் காரணமாக மீண்டும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.