நகைக் கடையில் ரூ.10 லட்சம் நகைகள் களவு... சிசிடிவியில் சிக்கிய திருடன் எலி!
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக் கடையில் ஊழியர்கள் வழக்கம்போல நகைகளைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைக் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. கடையில் கதவுகள் உடைக்கப்படாமலும் சுவர்களில் எந்தத் துளையும் இடப்படாமலும் நகைகள் மர்மமான முறையில் மாயமாகியிருந்ததால் ஊழியர்கள் பெரும் குழப்பமடைந்தனர். உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை எடுத்து ஊழியர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நள்ளிரவில் கடைக்குள் உலா வந்த எலி ஒன்று, அங்கு வைக்கப்பட்டிருந்த 10 வைர மோதிரங்கள் மற்றும் 3 தங்கச் சங்கிலிகளைத் தன் வாயால் கவ்வி இழுத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. மனிதர்கள் எவரும் கடைக்குள் நுழையாத நிலையில், எலியே இந்த நகைகளைக் கவ்விச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனையடுத்து எலி நகைகளை எடுத்துச் சென்ற திசையைக் கண்காணித்துக் கடை ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எலி சென்று மறைந்த வழியைத் தொடர்ந்து தேடிய போது அங்கு அமைக்கப்பட்டிருந்த எலியின் வளை கண்டறியப்பட்டது. நிலத்தைத் தோண்டி எலியின் வளையை ஆய்வு செய்தபோது, காணாமல் போன 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்துத் தங்க மற்றும் வைர நகைகளும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டன. சுமார் 13 மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பிறகே நகைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டதால் கடை உரிமையாளர்களும் ஊழியர்களும் பெருமூச்சு விட்டனர்.
