அனுபவிக்க வயது தடையல்ல... ஆற்றுக்கு மேலே அந்தரத்தில் ஜிப்லைனில் பயணித்து அசத்திய 76 வயது பாட்டி!

 
jipliner

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயதான லட்சுமி என்ற மூதாட்டி, சாகசங்களை அனுபவிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் பொன்னானியில் உள்ள சாகச மற்றும் நீர் பூங்காவுக்குச் சுற்றுலாச் சென்றுள்ளார். அங்கு இளைஞர்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அந்தரத்தில் கம்பியில் பயணிக்கும் ஜிப்லைன் சவாரியை மேற்கொள்வதைப் பார்த்து, தானும் அதில் பயணிக்க முடிவு செய்தார். குடும்பத்தினர் தடுத்த போதிலும், வரிசையில் காத்திருந்து சிறிதும் பயமின்றி அந்தரத்தில் ஜிப்லைனில் பயணித்துப் பொன்னானியில் உள்ள அகன்ற ஆற்றைக் கடந்து சாதனை படைத்தார்.

மற்றொரு நபருடன் சேர்ந்து அந்தரத்தில் ஜிப்லைனில் சாகசப் பயணம் செய்த இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இது குறித்துப் பேசிய லட்சுமி, சாகசங்களில் பங்கேற்கத் தனக்குப் பயமில்லை என்றும், தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் முயலலாம் என்றும் கூறினார். பயணத்தின் நடுவே தனது கையைப் பிடித்து வந்த இளைஞரிடம் கையை விடுமாறு கூறிவிட்டு, தானே பட்டைகளைப் பிடித்துக் கொண்டு சவாரியை முழுமையாக ரசித்துள்ளார். ஜிப்லைன் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற சாகசங்களைச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

76 வயதிலும் அஞ்சாமல் அந்தரத்தில் ஜிப்லைனில் பயணித்த மூதாட்டியின் துணிச்சல் அப்பகுதியில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது சாகசக் காணொளிக்கு எண்ணற்றோர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதைத் தனது உறுதியான செயல்பாட்டின் மூலம் இந்த மூதாட்டி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். கேரளாவில் 76 வயது மூதாட்டி ஆற்றுக்கு மேலே அந்தரத்தில் ஜிப்லைனில் பயணித்த இந்தச் சம்பவம் பலருக்கும் பெரும் ஊக்கத்தையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.