நாளை தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு... சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், ஸ்லோகம் இதுதான்!
கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியதிற்காக சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு விரதம்.மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் வேளையில் இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும். கௌரி விரதம், காமாட்சி நோன்பு எனவும் குறிப்பிடுவர். சாவித்திரி தன்னுடைய தவ வலிமையால் தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை எடுத்து சென்ற எமனுடன் போராடி மீட்டாள் என்பது புராணக் கதை.

இந்த தினத்தில் சத்தியவான் சாவித்திரி சரிதம் படிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கணவன் உயிரை திருப்பி கொடுத்த எமனுக்கு சாவித்திரி தன் பக்தியை நிரூபிக்க உருகாத வெண்ணெயால் செய்யப்பட்ட கார அடையை காணிக்கையாக படைத்தாள். கார் என்றால் கருமை . அடையான் என்றால் அடைந்தவன் .கருமையான இருள் சூழ்ந்த யமலோகத்தை அடையாதவன் என்பதால் காரடையான் நோன்பு என்ற பெயர் ஏற்பட்டது. கன்னிப் பெண்களுக்கு விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெறவும், சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனிதநீரில் நீராட வேண்டும். வாசலில் காவி பூசி கோலமிட வேண்டும். பூஜையறையிலும் கோலமிட்டு நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். பராசக்தியை நினைத்து இந்த நோன்பை அனுஷ்டிக்கலாம்.

கணவனின் கையால் புதிய சரடை கட்டிக் கொள்ளலாம். தங்கத்தால் தாலி சரடு அணிந்திருப்பவர்களும் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சிறிது மஞ்சள் கயிற்றையும் கோர்த்து அணிந்து கொள்ளலாம். மாசி சரடு பாசி படியும் என்பது முதுமொழி. மாசி மாதத்தில் அணியும் உங்களுடைய மாங்கல்ய சரடு பாசி படியும் வரை நீடிக்கும். இந்த நாளில் உமையவளுக்கு விரதமிருந்து, கார அடை செய்து படைத்து வழிபாடு செய்திட வேண்டிய வரம் அருள்வாள் அன்னை பராசக்தி.
நாளை மார்ச் 14ம் தேதி வியாழக்கிழமை சரடு கட்டிக் கொள்ளும் நேரம் பகல் 11.00 முதல் 12.00 வரை
சரடு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ ஸர்வதா
