இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை - பாகிஸ்தான் அரசுக்கு கபில் தேவ், சுனில் கவாஸ்கர் கடிதம்!
இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி இந்திய ஜாம்பவான்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அடியாலா சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கானை ஆய்வு செய்த நீதிமன்ற உதவியாளர் சமர்ப்பித்த அறிக்கையில், கண் நரம்பு அடைப்பு காரணமாக அவருக்கு தற்போது 15% பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கடந்த இரண்டரை ஆண்டுகால தனிமைச் சிறை வாசமே இந்த உடல்நலப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி, பிப்ரவரி 16-க்குள் மருத்துவக் குழு அமைத்து முழுப் பரிசோதனை செய்யவும், அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்கவும் உத்தரவிட்டார்.
இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி இந்திய ஜாம்பவான்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். 1992 உலகக் கோப்பை நாயகனுக்காக உலக கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
