கோயில் அர்ச்சகர் பயிற்சிக்கு அரிய வாய்ப்பு... மாணவர்களுக்கு மாதம் ரூ10,000 வரை ஊக்கத்தொகை !

 
vijay

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு முழு நேர பயிற்சிக்கு 10,000 ரூபாயும், பகுதி நேர பயிற்சிக்கு 5,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்தப் பயிற்சி காலம் முழுமையாக முடியும் வரை, இந்த ஊக்கத்தொகை மாணவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி

மாணவர்களின் வசதிக்காகப் பயிற்சி காலத்தில் தேவையான சத்தான உணவு, உடைகள், தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகம் மூலம் முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும் எனப்படுகிறது. ஆன்மீகக் கல்வியை ஊக்குவிக்கவும், பாரம்பரிய கலைகளை வளர்க்கவும் இந்தச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரிய ஆன்மீகப் பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் பலரும் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

இப்பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தகுதியான நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏதுவாகப் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கென அரசு அறிவித்துள்ள palanimurugan.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாணவர்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.