கூடங்குளத்தில் பயங்கரம்: 6 கொலை வழக்குகள் தொடர்புடைய ரவுடி 'துப்பாக்கி' செல்வம் வெட்டிக் கொலை!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான 'துப்பாக்கி' செல்வம் என்ற செல்வமுருகன், கூடங்குளம் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - சரஸ்வதி தம்பதியின் மகனான செல்வமுருகன், தன் 19-வது வயதில் தந்தை கொலையுண்ட வழக்கில் தொடர்புடைய நாராயணமூர்த்தியைக் கொலை செய்ததன் மூலம் குற்ற உலகிற்குள் நுழைந்தார். இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 27-க்கும் மேற்பட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்டபோது, சுசீந்திரம் அருகே பதுங்கியிருந்த இவரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை இவர் கத்தியால் தாக்கினார். அப்போது காவல்துறையினர் தற்காப்புக்காக அவரது காலில் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூடங்குளம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தோட்டத்தில் அவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதியினர் காலை நேரத்தில் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த கூடங்குளம் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார் மற்றும் அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
