அதிர்ச்சி... மதுரையில் மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் மிதித்து ஒருவர் உயிரிழப்பு!
மதுரை மேலூரில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தில், காளைகள் மிதித்து துப்புரவு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் அம்பலகாரன்பட்டி சுந்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து, திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம், தும்பைப்பட்டி – சிங்கம்புணரி சாலையில் நடத்தப்பட்டது. பெரிய மாடுகள் பிரிவில் 13 ஜோடிகள் பந்தயத்தில் கலந்து கொண்டதில், வெள்ளரிபட்டி அழகு கருப்புச்சாமி, தேனி கூடலூர் சரவணன், வாடிபட்டி முத்தாலம்மன், அவனியாபுரம் முருகன் காளைகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்தது.

இந்த போட்டியில் சிறிய மாடுகள் பிரிவில் 37 ஜோடிகள் கலந்து கொண்டதால், இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பிரிவில் தெற்குதெரு எம்எம்ஏ நண்பர்கள், பாகனேரி புகழேந்தி, ரத்தின கோட்டை அமரன் பிரதர்ஸ், கொடுக்கம்பட்டி சிவலிங்கம் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இரண்டாவது பிரிவில் தேனி மாவட்டம் பவிவசந்த், மலம்பட்டி அழகர்மலையான், மேலமடை சீமான ராஜா, அ.வல்லாளபட்டி கனகசபை ஆகியோரின் காளைகள் நான்கு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கமும் பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை நேரில் காண மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை பார்ப்பதற்காக, தும்பைப்பட்டி ஊராட்சியின் துப்புரவு தொழிலாளி ராஜாவும் வந்திருந்தார். அப்பகுதியில் சாலையோரம் நின்ற வேனில் ஏறினார். அப்போது திடீரென அறிவிப்பு ஏதும் இல்லாமல் வேனை டிரைவர் எடுத்ததால், அதிலிருந்து ராஜா தடுமாறி கீழே விழுந்தார். அதற்குள் பந்தயம் துவங்கி மாடுகள் சாலையில் ஓடத் தொடங்கி விட்டன.
கீழே விழுந்த ராஜா மீது காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஏறி இறங்கின. இதில் படுகாயமடைந்த அவரை, மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
