ரூ.1 கோடி வரை கடனுதவி, 75,000 அரசு பணியிடங்கள், முதல்வர் மருந்தகம்... சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
ஸ்டாலின்
 


முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி, ஜனவரி 2026க்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைப்பு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பேசிய அவர், 
“ஏழை எளிய நடுத்தர மக்களின் தேவையை உணர்ந்து அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது. நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் களஆய்வுகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் திராவிட மாடல் அரசு சார்பாக இந்த வீர விடுதலை திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய கொடியேற்றுகிறார் ஸ்டாலின்


அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளியோருக்கு சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டி உள்ளதால் இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். 
வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ.3 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படும். 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். 
தாய் நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்திடவும், வாழ்வை மேம்படுத்தவும் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள்  தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு  வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவ பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன் பெறும் வகையில் ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ ரூ.120 கோடி முதலீட்டு மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். 

ஸ்டாலின் ரவி


மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரம் என்பது ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம்  ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமான ரூ.10,000 என்பது இனி ரூ.10,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். சமீபகாலமாக நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. நமது சகோதர மாநிலமான கேரளத்தில்  பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கி உள்ளோம். தமிழகத்திலும் நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை பகுதிகள் அதிகம் உள்ளன. அங்கு பெருமழை  காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று கூறினார்.