அசத்தல்... மகள்களின் கல்விச் செலவுக்காக வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்த தாய்!
மகாநராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ரமாபாய் ரன்வீர், தனது மகள்களின் கல்விச் செலவுக்காக உள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெறும் காலில் ஓடி வெற்றி பெற்றுள்ளார். போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையைக் கொண்டு தனது பிள்ளைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர் முடிவு செய்துள்ளார். சாதாரண உடையில் பங்கேற்ற இந்தத் தாயின் வைராக்கியம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அம்பஜோகாய் பகுதியில் நடைபெற்ற அமிர்த தௌத் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட ரமாபாய், ஆரம்பத்தில் செருப்புடன் ஓடத் தொடங்கினார். ஆனால் சிறிது தூரம் கடந்த பிறகு சேற்றில் செருப்பு நழுவியதால், அதனை கையில் பிடித்துக்கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெறும் காலில் தொடர்ந்து ஓடினார். முறையான விளையாட்டு உடைகள் ஏதுமின்றி புடவையுடன் ஓடிய அவர், பல இளம் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு ரூ.3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அந்தத் தொகையைக் கொண்டு தனது மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதாகவும் அவர்களின் கல்விக்காகவே முழுப் பணத்தையும் பயன்படுத்தப் போவதாகவும் ரமாபாய் தெரிவித்தார். தாயின் இந்த உழைப்பும் தியாகமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
