மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
ஸ்டாலின்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அவ்வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் உண்மையான சொத்து விவரங்களை மறைத்துச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறி சிவஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

இவ்வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்து வந்தது. வழக்கு விசாரணை கட்டத்தை எட்டிய நிலையில், மனுதாரரான சிவஞானசம்பந்தம் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தான் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட இத் தேர்தல் வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.