திருமணமான ரெண்டே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் 29 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கான்பூர் தேஹாத்தில் வசித்துவரும் கஜேந்திர சங்க்வார் (30) என்பவர் கட்டுமான கொத்தனாராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விட்டுவிட்டு, அஸ்மா என்பவரை மதம் மாறித் திருமணம் செய்துகொண்டார். அஸ்மா தனது பெயரை சப்னா என்றும் மாற்றிக்கொண்டார்.

கஜேந்திராவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனும் உள்ள நிலையில், முதல் மனைவியை விட்டுவிட்டு சப்னாவைத் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது சப்னா தனது கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் முற்றி, கஜேந்திரா அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து, தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சப்னாவை அக்பர்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். காவல்துறையினர் கஜேந்திராவைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, "நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்" என்று அவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
