நடுரோட்டில் மனைவியைக் குத்திக்கொன்ற கணவன் - தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
மேற்கு வங்க மாநிலம் சோதேபூர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகப் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மனைவி என்று கூடப் பாராமல் பெண் ஒருவரை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதேபூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பொதுவெளியில் வைத்து இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சுபாஷ் தாஸ், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தை எதிர்பாராத விதமாக அறுத்ததோடு, அவரது வயிற்றிலும் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், சுபாஷ் தாஸைத் தடுத்துப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், கையில் ரத்தக்கறை படிந்த கத்தியை வைத்துக்கொண்டிருந்த சுபாஷ் தாஸ், தடுக்க வந்த பொதுமக்களையும் தன்னை நெருங்கக் கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் சற்றுப் பின்வாங்கினர்.

மனைவியைக் கொலை செய்த ஆத்திரம் அடங்குவதற்குள், சுபாஷ் தாஸ் அதே கத்தியால் தனது சொந்த வயிற்றிலும் பலமுறை குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்து சரிந்த அவரை மீட்ட உள்ளூர் காவல் துறையினர், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொடூரக் கொலை மற்றும் தற்கொலை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவி வருவதால், அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
