மூன்று மதத்தினருக்கும் ஒரே மேடையில் தடபுடலாக திருமணம்.. 2 லட்சத்திற்கு சீர் வரிசை கொடுத்த நெகிழ்ச்சி தருணம்.!

 
கோவை திருமணம்

அகில இந்திய கேரள முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 75வது பவளவிழா சார்பில், தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. 75 பெண்களை திருமணம் செய்ய திட்டமிட்டு சென்னையில் 17 ஜோடிகளுக்கும், திருச்சியில் 25 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர். மூன்றாம் கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் 23 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து திருமண விழாவில் பங்கேற்றனர். திருமண மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்ட மணமக்களை கேரள போர் மேளங்கள் முழங்க வரவேற்றனர். நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 23 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்தது.

இந்துக்களுக்கு ஆறு ஜோடிகளும், கிறிஸ்தவர்களுக்கு மூன்று ஜோடிகளும், முஸ்லீம்களுக்கு பதினான்கு ஜோடிகளும் அவரவர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை உற்சாகத்துடன் தொடங்கினார்கள். இதில், 23 தம்பதிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 10 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மதத்தினருக்கும் அந்தந்த மதங்களின் வழிகாட்டியான குரான் பைபிள் பகவத் கீதை வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற 2000 பேருக்கு நடமாடும் உணவு வழங்கப்பட்டது. வறுமையில் வாடும் ஏழைப் பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணத்தைக் கொண்டு வந்த அமைப்பினை மணமக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மனதாரப் பாராட்டினர்.

From around the web