1000 பிறை கண்ட 100 வயதை கடந்த தம்பதிகளுக்கு திருமணம்.!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் 5 தலைமுறை உறவினர்களுடன் வாழ்ந்து வரும் 100 வயதிற்கு தாத்தா பாட்டிக்கு, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து யாகம் நடத்தி மங்கள இசை முழங்க 100வது திருமண நாள் விழாவை கனகாபிஷேமாக நடத்தி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு உறவினர்கள் சிறப்பித்ததோடு, 'மணமக்களிடம்' ஆசி பெற்று சென்றுள்ளனர்.இந்த உலகத்தில் எத்தனை யுகங்கள் ஆனாலும் மாறாத ஒன்று என்று இருந்தால் அது காதல் தான்.. அமர காதல் தொடங்கி அலைபாயுதே காதல் வரை பல்வேறு காதல்களை தமிழ் சினிமாவும் செதுக்கி எடுத்து விட்டது.

பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல், படிக்கும் போது காதல், திருமணத்திற்கு பிறகு காதல் , திருமணம் கடந்த காதல் என பல்வேறு காதலை பார்த்திருப்போம். காதலிக்காமல் திருமணம் செய்து கொண்டு அதன் பின் காதலிப்பதும் வழக்கம் தான்.
தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ஓரிரு ஆண்டுகளில் பிரிந்து, திருமண முறிவு வேண்டி நீதிமன்றங்களையும் நாடி வருகின்றனர். அதனையும் தாண்டி ஆண்டுக்கணக்கில் எவ்வித பிணக்குமின்றி வாழும் ஜோடிகளும் ஆயிரக்கணக்கில் உண்டு. அப்படி ஒரு ஜோடிதான், ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரைப்பாளி பகுதியில் பெருமாள் வீரம்மாள் தம்பதியினர்.
இவர்களுக்கு 4 பெண்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 100 வயதை கடந்த வயதான தாத்தா பாட்டி இருவருக்கும் கனக அபிஷேக விழா மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், எள்ளு கொள்ளு பேரன்கள் என அனைவரும் கடந்த சில நாட்களாக திட்டமிட்டு வருகின்றனர். ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் யாகம் செய்து 100வது திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர். இதன் பின்னர் திருமணம் முடிந்த வயதான தம்பதியினரிடம் குடும்பத்தினர் உட்பட ஊர் மக்கள் என அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர்.

கணவன் மனைவியாக வாழக்ககூடியவர்கள் ஆயிரம் பெளர்ணமியை பார்த்தால் தான் கனக அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம் . இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையேயான உறவுகள் பல்வேறு சிறு கருத்துவேறுபாடு காரணமாகவே பிரிவு ஏற்படும் இந்நிலையில் இத்தனை வருடங்கள் திருமண வாழ்க்கை வாழ்ந்து வரும் வயதான தம்பதியினர் மீது மற்றவர்களை பொறாமைப்படும் அளவில் உள்ளது.
இது குறித்து அவரது மகன்கள் எங்களை விவசாய வேலை என சிறு வேலைகளை செய்து வளர்த்து வந்த தாய் தந்தைக்கு திருமணம் செய்து பார்ப்பது என்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருப்பதுடன் இருவரும் தற்போது வரை உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது சைக்கிளில் செல்வதும் சிறு வேலைக்கு செல்வதும் வாடிக்கையாக தந்தை பெருமாள் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
மகள்கள் கூறும்போது தாங்கள் பேத்தி எடுத்தும் கூட தங்களது தாய் தந்தைக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சியாகவும் இன்னும் தங்களை சார்ந்து இருக்காமல் அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற திருமணத்தை தங்களது குடும்பத்தில் உள்ள வயதான தம்பதியினருக்கு நிகழ்த்தி அவர்களை மகிழ்ச்சியடைய வேண்டும் என்கின்றனர். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரவர குடும்ப உறவுகளில் விரிசல்அதிகரித்து வரும் நிலையில் இந்த வயதான தம்பதியினர் 100வது கனக அபிஷேகம் காண்பவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக 60 வயதை பூர்த்தி செய்த தம்பதியினருக்கு சஷ்டியப்ப பூர்த்தியும், 70 வயதை கடந்தவர்களுக்கு பீமரத சாந்தியும், 80 வயது கடந்தவர்களுக்கு சதாபிஷேகமும், 96 வயதை கடந்தவர்களுக்கு கனகாபிஷேகமும் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது திருமணத்தின் போது முதல் திருமாங்கல்யமும், சஷ்டியை பூர்த்தியின் போது 2வது மாங்கல்யமும், பீமராத சாந்தியும் போது 3வது முறையும், சதாபிஷேகத்தின் போது 4வது முறையாகவும், கனகாபிஷேகத்தின் போது 4வது முறையாகவும் கணவன் மனைவிக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார். இதுவும் எல்லோருக்கும் வாய்ப்பது கிடையாது.
