MLA-வாக துடிக்கும் மேயர் பிரியா.. பக்க பலமாக நிற்கும் சேகர்பாபு!

 
மேயர் பிரியா மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வரவிருக்கும் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை மாநகராட்சியின் இளம் மேயராகக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பிரியா ராஜன், தற்போது தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாகச் சட்டமன்றத்திற்குள் நுழையத் திட்டமிட்டுள்ளார். மேயர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் நலப்பணிகளைச் செய்தாலும், சட்டமன்ற உறுப்பினராகி இன்னும் பெரிய அளவில் செயலாற்ற அவர் விரும்புவதாகத் தெரிகிறது. இது குறித்து ஏற்கனவே அவர் கட்சியின் மேலிடத்திடம் (குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம்) தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ. கனவை மெய்பிக்கும் வேலைகளைச் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

மேயர் பிரியா

மேயராக இருந்த காலத்தில் சென்னையின் பல்வேறு வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது, மழைக்கால நிவாரணப் பணிகளில் முன்களப் பணியாளராகச் செயல்பட்டது போன்றவை அவருக்கு இளைய தலைமுறை மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை(?) ஏற்படுத்தியுள்ளது.

பிரியா ராஜன் தற்போது சென்னையின் ஏதாவது ஒரு தனித் தொகுதியைக் குறிவைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பெரம்பூர் தொகுதி அவரது சொந்தப் பகுதி மற்றும் செல்வாக்கு மிக்க இடம் என்பதால், இங்குப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் பெரம்பூரில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் எழும்பூர் அல்லது திரு.வி.க நகர்: இந்தத் தொகுதிகளும் அவரது பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

மேயர் பிரியாவின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்துள்ள திமுக தலைமை, அவருக்கு வாய்ப்பளிக்கப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை அவர் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இது திமுக-வின் அடுத்த கட்ட வாரிசு அரசியலா அல்லது திறமைக்கான அங்கீகாரமா எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.