மீண்டும் பால் விலை உயர்வு... இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக் !

 
paal

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 2-வது முறையாகத் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா உள்ளிட்ட பல்வேறு முன்னணித் தனியார் பால் நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை அமல்படுத்தியுள்ளன. இதன்படி பால் மற்றும் தயிர் விற்பனை விலையானது லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திடீரென அரங்கேறியுள்ள இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பால்

பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை அதிகரிப்பு மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வாகன எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக வாகனங்களுக்கான வாடகை அதிகரிப்பும் இந்த விலை மாற்றத்திற்குக் முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. நடப்பாண்டில் மட்டும் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை பால் விலை உயர்ந்துள்ளதால், ஏழை எளிய மக்களின் குடும்ப பட்ஜெட் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் விலையேற்றத்தால் சிறிய உணவக உரிமையாளர்களும் டீக்கடை நடத்துபவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால்

தனியார் பால் நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் குறைந்த விலை கொண்ட அரசு ஆவின் பாலை அதிகம் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகப் பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், ஆவின் விநியோகத்தை சீரமைக்கவும் அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.