மாயமான ஐடி ஊழியர் புழல் ஏரியில் சடலமாக மீட்பு!
சென்னையில் மாயமான ஐடி பெண் ஊழியர் புழல் ஏரி அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் ஏரியின் பின்புறம் உள்ள தேங்கியுள்ள தண்ணீரில் பெண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புழல் போலீசார் மற்றும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். போலீசாரின் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை ராஜமங்கலம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆஷா கீர்த்தி (26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆஷா கீர்த்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஏற்கனவே ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், இன்று புழல் அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள இரட்டை ஏரியின் பின்புறம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆஷா கீர்த்தியின் உடல் தற்போது உடற்கூறு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஷா கீர்த்தி மாயமான மார்ச் 5ம் தேதி முதல் இன்று வரை அவரது செல்போன் சிக்னல்கள் எங்கு இருந்தது? அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? என்பது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
