திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி?! - வேகமெடுக்கும் அரசியல் சதுரங்கம்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், நிர்வாகக் காரணங்களுக்காகத் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக தரப்பில் ஒரு அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாகத் தனது கோட்டையாக வைத்திருந்த கொளத்தூர் தொகுதியில், இந்த முறை மு.க.ஸ்டாலின் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், ஒரு இடைத்தேர்தல் மூலம் மீண்டும் அவைக்குள் நுழைய திமுக திட்டமிட்டுள்ளது.

ஸ்டாலின்

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஒருவித அனுதாப அலையைப் பயன்படுத்தி, திருச்சியில் களம் காண ஸ்டாலின் விரும்புவதாகக் கூறப்படுகிறது. திருச்சி எப்போதும் 'அரசியல் திருப்புமுனை' தரும் மாவட்டம் என்பதால், அங்கிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மறுபுறம், தான் ராஜினாமா செய்யும் தொகுதியை மீண்டும் தவெக வசமே வைத்திருக்க விஜய் உறுதியாக உள்ளார்.

லால்குடியில் தோல்வியடைந்தாலும், திருச்சியில் செல்வாக்கு மிக்க மூத்த தலைவரான கு.ப.கிருஷ்ணனை இங்கு நிறுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். நேற்று பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆலோசனையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒருவேளை மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால், அவருக்கு இணையாக ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த தவெக இப்போதே தயாராகி வருகிறது.

ஸ்டாலின்

திமுக தலைவரே நேரடியாக ஒரு இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது தமிழக அரசியலில் அரிதான ஒன்று. இது நடந்தால், திருச்சி கிழக்கு தொகுதி இந்திய அளவில் கவனம் பெறும் நட்சத்திரத் தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.