இஸ்ரேல் தாக்குதலில் 'கடல் ஆமைகளின் பாதுகாவலர்' மோனா கலீல் மரணம்!

 
 'கடல் ஆமை பாதுகாவலர்' மோனா கலீல் மரணம்

மத்திய கிழக்கு நாடான லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கித் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'கடல் ஆமைகளின் பாதுகாவலர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான மோனா கலீல் (76), சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே வான்வழித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 4-ஆம் தேதி தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அசுர வான்வழித் தாக்குதலில் மோனா கலீல் படுகாயமடைந்தார்.

உடலின் பல்வேறு பாகங்களில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இரண்டு வாரங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது நெருங்கிய நண்பர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

76 வயதான மோனா கலீல், லெபனான் நாட்டின் மிக முக்கியமான மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் ஆளுமை ஆவார்.  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனானின் 'டயர்' நகருக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஒரு விருந்தினர் இல்லத்தை நடத்தி வந்தார். ஒவ்வொரு கோடை காலத்திலும் இந்தக் கடற்கரைக்கு வந்து முட்டையிடும், உலக அளவில் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கடல் ஆமைகளையும் அவற்றின் முட்டைகளையும் வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

நடப்பு 2026-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்தன. ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுக்க, அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மோனா கலீல் போன்ற மிக உயரிய மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது சர்வதேச சமூகத்தினிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.