மரவள்ளிக்கிழங்கு செடிகளில் செம்பேன் நோய் தாக்கம்.. 1000 ஏக்கருக்கு மேல் பாதிப்பு.. விவசாயிகள் வேதனை..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளில் செம்பேன் நோய் தாக்கப்பட்டதால் 1000 ஏக்கருக்கு மேல் பாதிப்பு, வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றியத்துக்குட்பட்ட புளியங்கோட்டை, வஞ்சிகுழி, ஆணைமடுவு, கொடியனூர், மூலக்காடு, மோட்டாம்பட்டி உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்களில் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிட்டிருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகள் செம்பேன் நோய் தாக்குதலால் இலையின் மேல்பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
மேலும் இந்த நோய் தாக்குவதால் செடியின் வளர்ச்சி குறைந்து இலைகளும் உதிர்ந்து விடுகிறது. இதனால் மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் மரவள்ளிக் கிழங்கு செடிகளை நேரடியாக பார்வையிட்டு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை வழங்க வேண்டும் என மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.