நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் - ஹோலி கொண்டாட்டம் ஆரம்பம்!

 
ஹோலி

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பண்டிகைக் காலங்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மொத்தம் 1,244 சிறப்பு ரயில் சேவைகளைஇயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் அதிகம் பயணிக்கும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மோடி ஹோலி

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காகச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் - மங்களூரு ஜங்ஷன் (09424 / 09423): இந்த வாராந்திர சிறப்பு ரயில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை இயக்கப்படுகிறது. இது கொங்கண் ரயில்வே வழியாகச் செல்வதால் கேரள மற்றும் கர்நாடகப் பயணிகளுக்குப் பெரிதும் உதவும்.

தானாபூர் - பெங்களூரு (03251 / 03252): பீகார் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூரு SMVT நிலையத்திற்குப் பிப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை தினசரிச் சேவைகள் வழங்கப்படுகின்றன. சென்னையிலிருந்து ஹவுரா, பாட்னா மற்றும் சந்த்ராகாச்சி ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஹோலி
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பெரிய நிலையங்களில் 'க்யூ'  மேலாண்மை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் (Waiting List) அதிகமாக இருப்பதால், இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான கூடுதல் இருக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணங்களுக்குப் பயணிகள் 'e-catering' வசதியைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பிடித்த உணவை ரயிலிலேயே ஆர்டர் செய்துகொள்ளலாம்.

பயணிகள் கடைசி நேரத் தவிப்பைத் தவிர்க்க IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் இப்போதே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு ரயில்களின் எண்கள் பொதுவாக '0' என்ற இலக்கத்தில் தொடங்கும் என்பதை வைத்து அவற்றை எளிதாக அடையாளம் காணலாம். இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகைக்குச் சொந்த ஊர் செல்லும் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.