4,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் சொகுசு கப்பலில் நோரோ வைரஸ் தொற்று...125 பயணிகளுக்கு தொற்று பாதிப்பு!

 
nero virus

4,000க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருக்கும் சொகுசு கப்பலில் வைரஸ் தொற்று பதற வைத்திருக்கிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து அலாஸ்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்ற 'ரூபி பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் ஒரு விசித்திரமான மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது. 20 நாள்கள் கொண்ட இந்த நீண்ட கடல் பயணத்தின் போது, கப்பலில் இருந்த பலருக்குத் திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க மத்தியச் சுகாதார அதிகாரிகள் நடத்திய தீவிர மருத்துவப் பரிசோதனையில், இது தீவிரமாகப் பரவக்கூடிய 'நோரோ வைரஸ்' தொற்று என்பது முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது.

america corona virus

இந்தத் திடீர் வைரஸ் தொற்றால் சொகுசு கப்பலில் பயணம் செய்த 102 பயணிகள் மற்றும் 23 பணியாளர்கள் உட்பட மொத்தம் 125 பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரம்மாண்டமான கப்பலில் மொத்தம் 3,032 பயணிகளும், 1,144 பணியாளர்களும் இருந்த நிலையில், இந்தத் தொற்று பரவல் அங்குள்ள மற்றவர்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற மக்கள் கூட்டமாகத் தங்கும் இடங்களில் இந்த வைரஸ் எளிதாகப் பரவக்கூடியது என்றும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது எனவும்  சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Massive cruise on lockdown off California coast as 120 passengers go down with disgusting symptoms

தற்பொழுது சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்திற்குத் திரும்பிய அந்தக் கப்பலில் பிரின்சஸ் க்ரூஸஸ் நிறுவனத்தினர் தீவிரமான தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கப்பலின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, அடுத்த பயணத்திற்குச் செல்வதற்கு முன்பாகக் கப்பல் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுச் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் சொகுசு கப்பல்களில் இதுபோன்ற வைரஸ் தொற்றுப் பரவல் சம்பவங்கள் இதுவரை 7 முறை பதிவாகியுள்ளதாக அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.