தமிழகத்தில் ரூ.5,300 கோடி முதலீடு - எம்.ஆர்.எப். புதிய டயர் தொழிற்சாலை!

 
MRF எம்.ஆர்.எஃப் MRF எம்.ஆர்.எஃப்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான எம்.ஆர்.எப். பெரும் முதலீட்டை அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசுக்கும், நிறுவனத்திற்கும் இடையே இன்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தென் மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய டயர் தொழிற்சாலை அமையவுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் மொத்தம் ரூ.5,300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் சுமார் 1,000 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

MRF எம்.ஆர்.எஃப் டயர்

சமீபகாலமாகத் தமிழக அரசு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் டயர் உற்பத்தியில் உலகின் முன்னணி மையமாகத் தமிழகத்தை மாற்றத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தாண்டி, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களுக்குப் பெரும் முதலீடுகளைக் கொண்டு செல்வது அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். 12 ஆண்டுகள் என்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம், தமிழகத்தின் தொழில் கொள்கை மீது பெருநிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே எம்.ஆர்.எப் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் இருந்தாலும், சிவகங்கையில் அமையவுள்ள இந்தப் புதிய ஆலை அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தமிழக அரசு அறிவித்த சிறப்புச் சலுகைகளே இந்த முதலீட்டுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.