கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்து அடித்துக் கொன்ற கொடூரம்... உடலை எரிக்க முயன்றது அம்பலம்!
கர்நாடக மாநிலத்தில் மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், 50 வயதுப் பெண்ணை அடித்துக் கொன்று உடலை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் செங்காவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் புதிதாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நாகராஜ் கண்டித்தும் லட்சுமி தேவம்மா அந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தான் வேலை செய்யும் தோட்டத்திற்கு லட்சுமி தேவம்மாவை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் குறித்துக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் நாகராஜ் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக லட்சுமி தேவம்மாவின் உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார்.
மறுநாள் காலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைப் பார்த்த தோட்டத்து உரிமையாளர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றித் துமகூரு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் நாகராஜைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
