மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி... தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!!
சென்னை கொடுங்கையூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் இன்பவள்ளி(65). கணவர் காலமானதால் இவர் தனது மகன் கண்ணையாவுடன் வசித்து வருகிறார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க வந்த இன்பவள்ளி திடீரென கோட்டை வாயில் அருகே கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் கோட்டை காவல்துறையினர், இன்பவள்ளியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, மூதாட்டியிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை அவரது மகன் கண்ணையா பறித்துக் கொண்டதுடன், தந்தை பெயரில் உள்ள வீட்டில் தன் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டுக் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.
இதனால் பிழைக்க வழியின்றி நடுத்தெருவுக்கு வந்ததாகவும், இதனால் தனது மகன் மீது நடவடிக்கை எடுத்து தனது நகை, பணத்தை மீட்டு தரவேண்டி முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்த போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூதாட்டி இன்பவள்ளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.